Friday 1 April 2011

மொரிஸியஸ் தீவு

மொரிஷியஸ், ஓர் அழகிய தீவு. இஃது ஆபிரிக்காக் கண்டத்திற்கு அருகிலே, மடகஸ்கர் என்ற மிகப் பெரிய தீவுக்கு அருகில் உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்காக, 3370 கி.மீ தொலைவிலே இந்தச் சிறிய தீவு அமைந்திருக்கிறது.
உலகப் படத்தை உற்று நோக்கினால் தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் அடையாளம் காண முடியும். இந்தத் தீவின் நீளம் 65 கி.மீ, அகலம் 45 கி.மீ இதன் கடற்கரையின் நீளம் 160 கி.மீ, மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.

வரலாறு
இந்தத் தீவில் 16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் வரத் தொடங்கினர். முதன் முதலாகப் போர்த்துக்கேயர், இந்தத் தீவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, டச்சு நாட்டவரும் இங்கே ஆட்சி செய்தனர். பின் பிரான்ஸ் தேசத்தின் கீழ் இந்தத் தீவு வந்தது. கடைசியாக, இந்தத் தீவை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து இந்தத் தீவு 1968 மார்ச் 12ம் திகதி சுதந்திரம் பெற்றது.
ஆகவே இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. இங்குள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள். முக்கியமாக, ஆசியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த மக்களே இங்கே குடியேறினர்.
இந்தத் தீவுக்கும் இலங்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. நம்மையும் பிரித்தானியர்கள் ஆண்டார்கள். இந்தக் குட்டித் தீவையும் அவர்களே ஆண்டார்கள். பிரித்தானியர்களிடமிருந்தே இலங்கையும் மொரிஷியஸ¤ம் விடுதலை பெற்றன.
மொரிஷியத் தீவின் முதல் பிரதம மந்திரி, சர் சிவசாகர் இராம்குலாம், அவரே அந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய காரணகர்த்தர், அந்த நாட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். அவருடைய தலைமையின் கீழ்தான், இரத்தம் சிந்தாமல் மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
இந்தத் தீவுக்கு முதலில் வந்தவர்கள், நிறைய அடிமைகளைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அடிமை வியாபாரம் மிகுதியாக நடைபெற்றது காரணம் பிரெஞ்சுக்காரர்களே. இவர்கள், அடிமைகளை வாங்கி விற்பதையும் அவர்களை வைத்துக் கடுமையாக வேலை வாங்குவதையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தார்கள்.
அடிமைகளைக் கொடூரமாக நடத்தியது. மொரிஸியஸ் வரலாற்றின் கருப்புப் பகுதியாகும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகள் விடுதலை பெற்றனர்.

இந்திய வம்சாவளியினர்
அதன் பின் நாட்டிலே தேயிலையும் கரும்பும் விளைவிக்கப் பிரரெஞ்சு அரசும் அதன் பின் வந்த பிரிட்டிஷ் அரசும் முயன்றன. இங்கே கடுமையாக உழைக்க, நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையானவர்களை பிரெஞ்சு அரசும் பிரிட்டிஷ் அரசும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தன.
இந்தியாவின் கேரளம், வங்காளம், புதுச்சேரி, மராட்டியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இவர்களைக் கொண்டு வந்தன. அப்படி வந்த இவர்களைத் தேயிலைத் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் வேலைக்கு அமர்ந்தினர்.
இந்த நாட்டின் 55 விழுக்காட்டினர். இந்திய வம்சாவளியினர், மொரிஷியஸ் தீவு. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறது. அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதனா இந்தியர்களுக்கு அவர்களின் தாய்நாட்டுடன் கூடிய தொடர்பு, வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எனவே இந்திய வம்சாவளியினர், மொரிஷியசில் இருந்த பழக்க வழக்கங்களையே ஏற்று, அதன்படி வாழத் தொடங்கினார்கள்.
அப்படி வாழும் இந்தியர்கள் இன்றைய மொரிஷியஸ் மக்கள் தொகையில், 55 வீதம் ஆவார்கள். இந்த நாட்டின் பணம், ரூபாய் என்ற பெயரிலேயே வழங்கப்பெறுகிறது. மொரிஷியஸ¤ ரூபாய்த் தாளில் அந்த ரூபாயின் மதிப்பு, தமிழ் எண்களிலும் எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் இந்துக் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரியை, மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்கே உள்ள சிவன் கோவில் ஒன்றில் அந்த நாளில் பல இலட்சம் பேர் கூடி வழிபடுகின்றனர். இங்குள்ள காளி கோவிலில் தீமிதி நடக்கிறது. சிறிய குன்றின் மேலே முருகன் கோவில் இருக்கிறது. தைப்பூச விழாவை, மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். காவடி எடுத்து, அலகு குத்தி, முருகனை வழிபடுவதைக் கண்டால், நமக்கு வியப்பு மேலிடும்.
மொரிஷியஸில் தேவாரம் படிக்கின்றனர். தமிழில் வாசித்தாலும் அவர்களுக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. தேவாரத்தைப் பிரெஞ்சு மொழியில் எழுதியே வாசிக்கின்றனர். தமிழ்ப் பெயர்கள் அனைத்து பிரெஞ்சு மொழியைச் சார்ந்த பெயர்களாகத் திரிந்துள்ளன. பிறர் தங்களை எளிதில் அழைக்க ஏதுவாக இவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
மொரிஷியஸில் மக்களாட்சி அடிப்படையிலான அரசாட்சி நடைபெறுகிறது. முறையான சுதந்திரமான தேர்தல்களை நடத்துகிறார்கள். இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே பிரதமராகச் செயலாற்றும் வாய்ப்பு உள்ளது.

பூலோகச் சொர்க்கம்
இந்தத் தீவு, மிக அழகானது. இதன் அழகை வர்ணிக்கும்போது, இறைவன், மொரிஷியத் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான், என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய கடல். இந்தக் கடலின் பல இடங்களில் ஒரு குண்டூசியைப் போட்டாலும் அதைப் பார்த்து எடுத்துவிடலாம். அந்த அளவுக்குத் தெளிவான தண்ணீர்.
சில இடங்களில் நீங்கள், கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கி.மீ நடந்தாலும் இடுப்பளவு நீரிலேயே இருப்பீர்கள். கடல் மீன்களும் கடல் அழகும் உங்களைக் கவரும். இந்த நாட்டில் உல்லாசப் பயணிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காரணம், அந்தக் கடல், அவர்களை அவ்வளவு ஈர்க்கிறது. கடற்கரையை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக் காக்கின்றனர்.
மொரிஷியசில் அழகிய அருவி ஒன்றும் உள்ளது. பல வித நிறங்களில் மணல் உள்ளது. குறிப்பிட்ட ஓரிடத்தில் எட்டு நிறங்களில் மணல் உள்ளது என்றால் நம்புவீர்களா?
மொரிஷியஸில் ஒரு காலத்திலே அதிகமான தீப்பிழம்புகள் இருந்தன. அந்தத் தீப்பிழம்புகள், கற்பாறைகளாக உறைந்துள்ளமையை இன்றும் காணலாம்.

தொழில் வளர்ச்சி
மொரிஷியஸில் முதலில் தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். ஆயினும் அந்தத் தேயிலைக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்பு கிட்டவில்லை. எனவே தேயிலையைத் தங்கள் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு. கரும்பையே அதிகமாகப் பயிரிடுகிறார்கள்.
மொரிஷியஸில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கரும்புத் தோட்டங்களையே காணலாம். இந்தக் கரும்புகள், கரும்பு ஆலைகளில் சர்க்கரையாக மாறி, உலகச் சந்தையில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. கரும்பும் சர்க்கரையும் மொரிஸியஸின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மொரிஷியஸில் தைத்த ஆடைத் தொழிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மொரிஷியஸின் ஆடைத் தொழிலில் இலங்கையிலிருந்தும் சுமார் 4 ஆயிரம் பேர்கள் கடமை ஆற்றுகிறார்கள்.

உல்லாசப் பயணிகளின் உடனடித் தேர்வு
மொரிஷியஸ் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அழகுறக் கட்டியுள்ளனர். இவை, மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்தவை. ஒரு நாளைக்கு ஓர் அறைக்குச் சுமார் 40-50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக் கட்டணம் அமைந்துள்ளது. அவ்வளவு அழகான கடலும் கடற்கரையும் இருப்பதால் இவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதிக செலவில் உள்ள அறைகளைப் போலவே குறைந்த செலவிலும் அறைகள் உள்ளன.
கடல் நீர் தொடர்புடைய பல்வேறு விளையாட்டுகள், இங்கே உள்ளன. பல்வேறு விசைப் படகுகளில் பயணிக்கலாம். விமானத்திலிருந்து பராசூட் அணிந்துகொண்டு, தண்ணீரில் குதிக்கலாம். கடலுக்கு அடியில் நடக்கலாம். இவ்வாறு உல்லாசப் பயணிகளுக்குப் பலவித விநோதங்கள் இங்கே உள்ளன. இவை, அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
இந்தச் சிறிய தீவுக்கு ஓர் ஆண்டுக்கு, இப்பொழுது 9 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகிறார்கள். இலங்கைக்கோ, இந்த நல்ல சூழ்நிலையில் 8 இலட்சம் பேர்கள் மட்டுமே வருகிறார்கள். இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஓர் ஆண்டுக்கு 20 இலட்சமாக உயர்ந்த, மொரிஷியஸ் அரசு முயன்று வருகிறது.
இலங்கையிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் புது மணத் தம்பதியினர் அநேகமானோர், தங்கள் தேனிலவுக்காக மொரிஷியஸ¤க்குச் செல்வது வழக்கமாகி வருகிறது. மனத்திற்கு மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் தங்கள் தேனிலவைக் கழிக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இலங்கையில் கெளரவத் தூதரகம்
மொரிஷியசின் கெளரவத் தூதரகம், இலங்கைத் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் செயல்படுகிறது. இலங்கையிலிருந்து மொரிஷியஸ் செல்ல விரும்புவோர். தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், இந்தத் தூதரகத்திலேயே மொரிஷியசுக்குள் நுழைய அனுமதியை (விசா)ப் பெறலாம்.
மொரிஷியஸ் தீவை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. சிங்கப்பூர், சென்னை, மும்பை, டில்லி, துபாய் ஆகிய மாநகரங்களின் வழியே செல்லலாம். இவற்றுள் துபாய் வழியே தினமும் மொரிஷியஸ¤க்குச் செல்லும் வசதி உண்டு.
இலங்கையிலிருந்து துபாய் செல்ல, 4 மணி நேரம் ஆகும். துபாயிலிருந்து மொரிஷியஸ¤க்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து வாரம் ஒரு முறை, மொரிஷியஸ¤க்குச் செல்ல விமானம் இருக்கிறது. இது, சுமார் 7 மணி நேரப் பயணமாகும். பயணக் கட்டணம் சுமார் 80 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை இருக்கும். இந்த அழகிய தீவுக்கு நீங்களும் ஒரு முறை சென்று, அனுபவித்து வரலாமே.

கெளரவ தூதுவரின் செய்தி
உலகப் படத்திலே மொரிஷியஸ் தீவு ஒரு புள்ளி ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ என்று சொல்வது போல் இந்த சிறிய மொரிஷியஸ் தீவு பல பெருமைகளை உள்ளடக்கியது. இலங்கை தீவுக்கும் மொரிஷியஸ் தீவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு இந்திய மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். மொரிஷியஸ் தீவுக்கும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். இரு தீவுகளுமே பிரித்தானியாவிடம் இருந்து தான் சுதந்திரம் பெற்றன.
இரு தீவுகளுக்கிடையே உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவுக்கு மிக சமீபத்தில் இருந்த காரணத்தினாலும், கப்பல் போக்குவரத்து இருந்த காரணத்தினாலும் இலங்கை இந்திய தமிழர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு இருந்து வந்தது.
மொரிஷியஸ் தீவில் இருந்து இந்தியா பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தமையாலும், கப்பல் போக்குவரத்து இல்லாமை காரணத்திலும் அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்கு தாய் நாட்டுடன் தொடர்பு அற்றுப் போய் விட்டது. அங்கு வாழும் பத்து வீதமான தமிழர்களுக்கு தமிழ் பேசவோ, படிக்கவோ தெரியாது ஆனால் தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு.
மொரிஷியஸ் தீவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் இல்லாத போது ‘டோடோ’ என்ற வாத்து போன்ற பறவைகள் பல ஆயிரக்கணக்கில் இருந்தன இந்தப் பறவைகளுக்கு பறக்கவோ, ஓடவோ முடியாது. இந்தப் பறவைகளை அங்கு முதலில் வந்த மனித இனம் ஒழித்துக்கட்டியது.
இங்குள்ள எல்லா மக்களுமே எழுத்து அற்ற ‘கிரியோல்’ என்ற மொழியை பேசுகிறார்கள். இந்த மொழிக்கு இலக்கணம் இல்லாத காரணத்தினாலே மொரிஷியஸ் தீவுக்கு வருகின்ற எல்லோருமே இந்த மொழியை சுலபமாக கற்றுக்கொள்கின்றனர்.
இந்தக் குட்டித் தீவிலே இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன என்றால் நம்புவீர்களா? தனி மனித வருட வருமானம் இலங்கை ரூபா ஒன்பது இலட்சத்தையும் தாண்டி நிற்கின்றது.

சந்திரனை தொட்டது யார்....

சென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.

என்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். அந்த நிகழ்ச்சி - MythBusters.

அந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும்,  அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.

முதல் படம்:



Mythbusters கேள்விகள்:
படத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.
NASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார்,  கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.
இரண்டாவது படம்:
MythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.
NASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை.  எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.
மூன்றாவது படம்:
MythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது?
NASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.

நான்காவது படம்:
MythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு  பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.
NASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என  பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.
ஐந்தாவது படம்:



Mythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி? நிழல் மறைத்து கருப்பாக  தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.
NASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.
எது எப்படியோ? நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.

கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....

Wednesday 16 March 2011

சூரியக் குடும்பத்தின் எல்லையை நெருங்கும் வாயேஜர்!


அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.

விண்வெளியில் அது பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு பதினேழு  கிலோமீட்டர்கள். பிரம்மாண்டமான இந்த பேரண்டத்தில் நம்மை தவிர வேறு
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்ற மனித குலத்தின் விடையில்லா கேள்விகளுக்கு விடை தேடி ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் மனித இனத்தின் செய்திகள் தங்கத் தகடு மற்றும் ஆடியோ வடிவிலும், சூரியக் குடும்பத்தின் வரைபடம் அதில் ப்போமியின் இடம் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தனை தூரத்திலிருந்து ஈனஸ்வரத்தில் இன்னும் சிக்னல்களை நமக்கு அது அனுப்பிக்கொண்டே உள்ளது. அதை வைத்து அது தற்போது இருக்குமிடத்தை விஞ்ஞானிகள் அறிகின்றனர். தற்போது அது டெர்மினேஷன் ஷாக் எனப்படும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையினை அடைந்து விட்டது. சூரிய மண்டலமெங்கும் வீசும் சூரியப் புயல் பூடோ கிரகத்தினை எல்லாம் தாண்டி ஒரு இடத்தில் சட்டென்று குறைகிறது. அதுவே சூரிய மண்டல எல்லை என்று கணிக்கப்படுகிறது.

வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
கடந்த ஜூன் மாதம் வாயேஜர் அனுப்பிய சமிக்ஞைகள் அது பயணிக்கும் இடத்தில் சூரிய காற்றின் வேகம் பூஜ்யம் என்று காட்டியது. அதை வைத்து இன்னும் சில வருடங்களில் வாயேஜர் சூரிய மண்டலத்தினைக் கடந்து பேரண்டத்தினுள் பிரவேசிக்கும் என்று விஞ்ஞானிகள் அறிகின்றனர்.

இதைப் போல வாயேஜர் 2 எனும் இன்னொரு ஆளில்லா விண்கலத்தை வாயேஜர்- 1க்கு எதிர்ப்புறமாக அதே 1977 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாசா ஏவியது. வினாடிக்கு பதினைந்து கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதற்கும் இம்மாதிரி விளைவினை இன்னும் சில வருடங்களில் சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் தேரைகள்

றைவனின் கோடிக்கணக்கான அத்தாட்சிகளில் கல்லுக்குள் வாழும் தேரை இனமும் ஓன்று. கல்லுக்குள் உணவு வைத்து அதை பல காலம் வாழும் படி படைத்துள்ளான் இறைவன். சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனை புகழ்ந்து பாடும் பாடல் உண்டு. ஆப்பிரிக்காவில் பாலைவனம் சேர்ந்த காடுகளில் பயணிக்கும் நாடோடிகள் பூமிக்கு அடியில் இருக்கும் தேரைகளை கண்டுபிடித்து அதன் வயிற்றில் இருக்கு தண்ணீரை அருந்தும் வழக்கம் உண்டு. ஒரு மனிதனின் தாகத்தை தணிக்கும் அளவிற்கு தண்ணீர் வயிற்றில் இருக்கும் தேரைகளும் உண்டு. தேரை இனத்தின் பெண் தேரைகள் முட்டையிட்டு சென்று விடும், ஆண் தேரைகள் தான் அந்த முட்டை பொறியும் வரை காத்திருந்து அடைகாக்கும். இது தவளை இனம் போல தாவி செல்லாது, மாறாக காலை இழுத்து தவழ்ந்து செல்லும். இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படும். மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.

இத்தனை தனித்துவம் கொண்ட தேரைகளுக்கு இறைவனை அளித்துள்ள இன்னொரு மகத்துவம் நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் ஆற்றல் உடையதாக இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் திறந்தவெளி பலகலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேரைகளின் இனவிருத்தியை இத்தாலியில் உள்ள ஒரு ஏரியில் ஆராய்ந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஏரிகளில் இருந்த தேரைகள் எல்லாம் திடிரென்று வேறு இடம் நகர்ந்து செல்ல தொடங்கி விட்டன. அவை அந்த ஏரியை விட்டு வேறு இடத்திருக்கு இடமாற்றம் செய்த ஐந்து நாட்கள் கழித்து அங்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஒரு வருடம் தேரைகளின் உடற்கூறுகளை நன்கு சோதித்து, பூகம்பம் வரும் முன் நிலத்தில் இருந்து வெளியேறும் வாயுவினை தேரைகள் அறியும் ஆற்றல் உடையதாக கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.

பூகம்பம் வருவதற்கு முன்பே விலங்கினங்கள் அதை அறியும் ஆற்றல் உண்டு என்று பரவலாக தெரிந்திருப்பினும் அதை முதன் முதலில் அதாரப்பூர்வமாக ஆவணம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

E=mc² இன் கதை




      நம்மில் பலரிடம் இந்த உலகிலேயே மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடு எதுவென்றுக் கேட்டால், எல்லோரும் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய பதில் "E = mc2 " என்பதாகத்தான் இருக்கும்!

அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜொலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணு குண்டால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் நாசமாவதற்கும் பாதை வகுத்தது.

இந்த அறிவியல் விந்தைக்குப் பின்னால் ஐன்ஸ்டைன் ஒருவரது உழைப்பு மாத்திரம் இல்லை. அதன் பின்னே பல மேதைகளின் வியர்வையும், ரத்தமும், காதலும் கலவையாகக் கலந்த ஒரு நூற்றாண்டு வரலாறு மறைந்துள்ளது. அதைத்தான் இப்போது நாம் கொஞ்சம் அலசப் போகிறோம்.

E = Energy

Michael Faraday, British scientist, 1791-1867

லண்டனின் சேரிப்பகுதியில், ஏழைக் கொல்லனின் மகனாகப் பிறந்த மைகேல் ஃபாரடே எனும் இளைஞனுக்கு அடிப்படைக் கல்வி அறிவு மிகக் குறைவு. புத்தகம் பைண்ட் செய்யும் ஒருக்  கடையில் வேலைப்பார்க்கும் போது, அங்கு வரும் புத்தகங்களைப் படித்தே, தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இப்படி  வளர்ந்து பின்னொரு காலத்தில் பெருமைமிக்க இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து புகழ் பெற்றார்.

1800 களின் துவக்கத்தில் ஆற்றல் (energy) என்பது பிரபஞ்சமளாவிய ஒரே ஆக்கப் பொருள் என்ற கருத்து இல்லாமலிருந்தது. நெருப்பிலிருந்து வரும் வெப்பமோ, சூரியனிலிருந்து வரும் கதிரோ, வெவ்வேறானவை என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் நம்ம ஃபரடே காட்சியில் வருகிறார். தன் அளப்பரிய உந்துதலாலும் கூர்ந்து நோக்கும் திறனாலும் சில விஷயங்களை ஆராய முற்பட்டார். மின்சாரம் பாயும் ஒரு கம்பியின் அருகே கொண்டு செல்லப்படும் ஒரு காந்தமுள் கண்ணா பின்னவென்று ஆடி ஏதோ ஒரு திசையில் நிற்பதைக் கண்டு வியந்தார்! இப்படி பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு மின் கம்பியைச் சுற்றி, மின்சார ஓட்டத்துக்கு நேர்கோணத்தில் காந்த வயல் (magnetic field) உருவாகிறது என்பதயும் கண்டுபிடித்தார். அதைப் போலவே ஒரு காந்தத்தைக் கொண்டு மின்சார ஓட்ட திசையையும் மாற்றிக் காட்டினார். இதுதான் உலகின் முதல் மின்சார மோட்டார்!மின் சக்தியும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றும் நிலைநாட்டினார். இப்படியாக மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது! இங்கிருந்துதான் ஐன்ஸ்டைன், ஆற்றல் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்று; ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறக்கூடியது என்பதைப் பயன்படுத்திக்கொண்டார்.

m = mass

Antoine-Laurent Lavoisier, French nobleman, tax collector, lawyer and amateur chemist, 1743-1794.

அன்டோனி லாரென்ட் லவோயிசியர் எனும் அமெச்சூர் வேதியல் விஞ்ஞானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வரி வசூலிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஒரு செல்வச் சீமான். இவரின் வேதியல் பங்களிப்பு அமெச்சூர் தனமானது என்று கூறப்பட்டாலும், இவரை நவீன வேதியலின் தந்தை என்றும் கூறுவர். இவரே ஆக்சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நாமகரணம் சூட்டியவர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் தண்ணீர் என்பதைக் கூறி, மனிதன் நிலவு வரை செல்ல சிவப்புக் கம்பளம் விரித்தவர். இவரது அயராத உழைப்பால் இவர் உலகுக்கும் குறிப்பாக  ஐன்ஸ்டைனுக்கும் உணர்த்திய உண்மை....  ஆற்றலைப்போலவே, வேறு எந்தவித மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது! அவரின் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, ஒரு(மரக்) கட்டை எரியூட்டப்பட்டால், அதிலுள்ள ப்லோகிஸ்டன் (phlogiston) எனும் பொருளின் மூலமாக, அப்பொருளின் நிறை, நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது. ஆகவேதான் உபரியாகக் கிடைக்கும் சாம்பலின் எடை, ஒரிஜினல் மரக்கட்டையின் எடையைவிட குறைந்துகாணப்படுகிறது என்று எல்லா அறிவியலாளரும் நம்பினர். அப்போதுதான் லவோயிசியர், தன் அயராத உழைப்பினாலும், அறிவார்ந்த தன் மனைவியின் உதவியோடு, எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும் ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது... ஒரு வேதியல் சமன்பாட்டின் இரு பக்கங்களும் எப்போதும் சமமாக இருக்கும் என்பதையும் நிரூபித்தார். அவரின் இந்தக் கண்டுப்பிடிப்பே ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையில் முக்கியப் பங்காற்றியது. ஆனால் இதுவே இவரின் கடைசி கண்டுப்பிடிப்பாக ஆகிவிட்டது. பிரெஞ்சு மக்களுக்கு விடிவெள்ளியாக வந்த புரட்சி, இவருக்கு முற்றுப் புள்ளியாக மாறிப்போனது. இவர் பணக்கார வர்கத்தின் பிரதிநிதி என்பதால், பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நடந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கம் இவரைக் குறமற்றவர்  என்று பிரகடனப்படுத்தியது. அதன்பின், அவரின் சில உடைமைகளை அவரின் மனைவியிடம் அளிக்கப்பட்டபோது, அதன் மீது ஒரு துண்டுச்  சீட்டில் 'தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட லவோயிசியரின் விதவைக்கு....' என்று எழுதிருந்தது! பாவம். என்ன  ஒரு சோகம்?

"It took them only an instant to cut off his head, but France may not produce another like it in a century." - Joseph-Louis Lagrange, an Italian-born mathematician and astronomer.

c = Celeritas or Speed of light

James Clerk Maxwell, British mathematical physicist, 1831-1879. and Michael Faraday

எல்லாம் சரி. ஆற்றலும், நிறையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதனால் அவை சமன் பாட்டில் இடம் பிடித்துள்ளன. ஆனால் இந்த ஒளி எப்படி உள்ளே வந்தது? மிக மிக வேகமாகச் செல்லுவதற்கு லத்தீன் மொழியில் செலிரிட்டஸ் (celeritas) என்று அழைக்கப் படுகிறது. மனிதன் அறிவுக்கு எட்டியவரை மிக வேகமாக செல்லக் கூடியது ஒளி மட்டுமே. வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்! இங்கே மீண்டும் மைகேல் ஃபாரடே உள்ளே வருகிறார். ரொம்பக் காலமாகவே அவர் ஒளியும் மின்சாரத்தைப் போலவும் காந்தப்புலத்தைப் போலவும் மின்காந்தவியலைச் சார்ந்ததுதான் என்று உறுதியாக நம்பினார்.  ஆனால் அதைக் கணிதத்தனமாக நிரூபிக்க தேவையான எண்கணித அறிவு அவரிடம் போதியதாக இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு படிக்காத மேதைதானே! இந்த இடத்தில்தான் நன்கு படித்த கணிதத்தில் புலியான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எண்ணு இளைஞர் வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, மின்சாரத்திலிருந்து காந்தப் புலமும் காந்தப் புலத்திலிருந்து மின்சாரமும்... ஒரு குறிப்பிட்ட வேகத்திலிருக்கும் போது உண்டாகும். அந்த வேகம்தான் ஒளியின் வேகம்; அது எப்போதும் மாறாது என்று எண் கணிதம் மூலமாக உலகுக்கு நிரூபித்தனர். இதையும் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் சேர்த்துக்கொண்டார். ஒளியின் வேகம் மாறாது என்றால், வேறு ஏதோ ஒன்று மாறித்தான் ஆகவேண்டும். அது நிறை. ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அதன் நிறை அதிகரிக்கும் என்றும் அது அதன் ஆற்றலை சார்ந்திருக்கும் என்பதையும் குறித்துக் கொண்டார்.

2 - Squared

Emilie du Chatelet, French aristocrat, mathematician and physicist, 1706-1749.

இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப் படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்று தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).

இதற்க்கான விடை எமிலி டு ஷாட்டலே எனும் இளம் பிரெஞ்சு சீமாட்டியிடம் இருந்து வந்தது. இந்த எமிலி, தான் வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டுப் பெண்களில் மிகவும் வித்தியாசமான புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். அவருக்குப் புலமை இல்லாத கலையே இல்லை எனலாம். சர் ஐசக் நியூட்டனின் Principia Mathametica அறிவியலின் வேதத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அறிவியல் மற்றும் மொழி ஞானம் கொண்டவர். தன் 23 வது வயது முதலே கணிதத்தில் கரை கண்டு, ஐசக் நியூட்டன் முதலான மேதைகளுக்கே சவாலாகத் இருந்தார்.

ஒரு நகரும் பொருளுக்கு ஆற்றல் உண்டு. ஒரு பந்து, அதே போன்ற பந்தைவிட இரு மடங்கு வேகத்தில் சென்றால், அதன் ஆற்றலும் இரு மடங்கு இருக்கும் என்பது நியூட்டனின் கூற்று. ஆனால் நம்ம எமிலி மேடம் கூறுகிறார், அதன் ஆற்றல் நான்கு மடங்கு இருக்குமென்று! சொல்வதோடு நிற்கவில்லை. அதை ஒரு சிறு பரிசோதனை மூலம் நிரூபிக்கவும் செய்தார். சிறு ஈய குண்டுகளை குறிப்பட்ட உயரத்தில்லிருந்து, மிருதுவான களிமண் மீது போட்டு, அது எவ்வளவு தூரம் உள்ளே பதிகிறது என்று அளந்து கணக்கிட்டார். அப்போதுதான் அந்த களிமண்ணின் மீது போடப்பட்ட குண்டுகளின் ஆற்றல் அவைகளின் வேகத்தின் இரண்டு மடங்காக இல்லை, இரண்டு அடுக்காக (SQUARE) இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டு, ஆணானப்பட்ட (இதற்கு மாற்றுச் சொல் கிடைக்குமா?) நியூட்டன் சொன்ன ஒரு விதி மறைந்து போனது இந்தப் பெண்ணால்! இதைத்தான் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் உபயோகப்படுத்திக்கொண்டார்.

>மேடம் எமிலியைப்பற்றி இன்னும் சில கூடுதல் தகவல்கள். இவருக்கு ஏகப்பட்ட ஆண்களின் தொடர்பு இருந்ததாம்! அதுவும் அவரின் கணவருக்குத் தெரிந்தே!! அதில் ஒருவர் புகழ்ப்பெற்ற 'வைர நெஞ்ச வால்டேர்'ரும் ஒருவர். இருவரும் சேர்ந்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளனர்.(Elements of Newton's Philosophy). இவ்வளவு இருந்தும் பரிதாபகரமாக, தன் 43ஆம் வயதில், ஒரு இளம் கவிஞனால் கர்ப்பமாகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, ஆறு நாட்கள் கழித்து இறந்துபோனார்!
'c' என்ற ஒளியின் வேகம் ஒரு மாறா எண் என்பதை முதலில் புரிந்துக் கொண்டவர்களில் ஐன்ஸ்டைன் முதலாமவர். மிக நுட்பமாகக் கவனியுங்கள்.... நாம் என்னதான் வேகமாக சென்றாலும், நம்மிலிருந்து புறப்படும் ஒளி, மணிக்கு 670 மில்லியன் மைல் வேகத்தில் நம்மை விட்டுப் போய்விடும்! (ஆகவே ஒளியின் வேகத்தில் யாரும் பிரயாணிக்கவே முடியாது!) இங்கேதான் மேக்ஸ்வேல்லின் ஐடியாவை பிடித்துக்கொண்டார் ஐன்ஸ்டைன். 'c' என்பது மாறா எண் என்றால், ஒளியின் வேகத்தை அடையும் ஒருபொருளின் நிறை என்னவாகும்? அது கண்டிப்பாக அதிகரிக்கும்! இதிலிருந்து அவர் கூறுவது நிறையும், ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏன்...? அவை இரண்டும் ஒன்றே..! ஆற்றல்தான் நிறை, நிறைதான் ஆற்றல்! c² இன் மதிப்பு மிக மிக மிக அதிகமாக இருப்பதால், ஒரு சின்ன, கடுகளவு நிறை கொண்ட பொருளுக்கு அளவில்லாத ஆற்றல் இருப்பது நிச்சயம்! இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நாமெல்லாம் அந்த நட்சத்திரத் துகள்களால் உருவானவர்கள் என்பதையும் சூரியனிலிருந்து  நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிந்துவிடும்! நட்சதிரங்கள் தங்களின் அளவிட முடியாத நிறையை ஆற்றலாக மாற்றியபடியே உள்ளன என்பதும் விளங்கிவிடும்.
மேற்கூறிய அனைத்து விவரங்களும் David Bodanis எழுதிய E=mc2 : A Biography of the World's Most Famous Equation என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டவை.

வேற்று கிரகங்களில் மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களைச் சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்டார்டிகா, சைபீரியா, அலாஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரி கற்கள் வித்தியாசமானவை என்றும், இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்தது இல்லை என்றும், இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பது தான் பூமியில் உள்ளது, பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை, பூமிக்கு வெளியேவும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதையே இவை காட்டுகின்றன என்றும் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
"இவற்றுக்கு எல்லாம் மேலாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம், நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் பூமியில் வாழும் மனித இனத்துடன் தொடர்புடையவை என்பது தான். நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டேன். ஆனால், அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. "இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார். இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவில் இருந்து ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அழிவின் விளிம்பில் பிணந்தின்னிக் கழுகுகள்


"தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது.
இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு.

இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பிணந்தின்னிக்கழுகுகள் குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பறவை ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, "பம்பாய் இயற்கை வரலாற்று மையம்' பல்வேறு பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் "அருளகம்' அமைப்பு இணைந்து செயல்படுகிறது.


தமிழகத்தில் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலும், கேரளாவில் ஆறு இடங்களிலும், பிணந்தின்னிக்கழுகுகள் இருப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினோம்.  அக்., - நவ., மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு.


கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது. கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும். 


இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது.  நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது.

நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

தற்போதும், "டைக்குளோபினாக்' வலிநிவாரணி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்டோபர் தெரிவித்தார்.