Wednesday 16 March 2011

சூரியக் குடும்பத்தின் எல்லையை நெருங்கும் வாயேஜர்!


அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.

விண்வெளியில் அது பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு பதினேழு  கிலோமீட்டர்கள். பிரம்மாண்டமான இந்த பேரண்டத்தில் நம்மை தவிர வேறு
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்ற மனித குலத்தின் விடையில்லா கேள்விகளுக்கு விடை தேடி ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் மனித இனத்தின் செய்திகள் தங்கத் தகடு மற்றும் ஆடியோ வடிவிலும், சூரியக் குடும்பத்தின் வரைபடம் அதில் ப்போமியின் இடம் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தனை தூரத்திலிருந்து ஈனஸ்வரத்தில் இன்னும் சிக்னல்களை நமக்கு அது அனுப்பிக்கொண்டே உள்ளது. அதை வைத்து அது தற்போது இருக்குமிடத்தை விஞ்ஞானிகள் அறிகின்றனர். தற்போது அது டெர்மினேஷன் ஷாக் எனப்படும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லையினை அடைந்து விட்டது. சூரிய மண்டலமெங்கும் வீசும் சூரியப் புயல் பூடோ கிரகத்தினை எல்லாம் தாண்டி ஒரு இடத்தில் சட்டென்று குறைகிறது. அதுவே சூரிய மண்டல எல்லை என்று கணிக்கப்படுகிறது.

வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
வாயேஜர் அனுப்பிய நமது அண்டைய கிரகங்களின் புகைப்படங்கள்
கடந்த ஜூன் மாதம் வாயேஜர் அனுப்பிய சமிக்ஞைகள் அது பயணிக்கும் இடத்தில் சூரிய காற்றின் வேகம் பூஜ்யம் என்று காட்டியது. அதை வைத்து இன்னும் சில வருடங்களில் வாயேஜர் சூரிய மண்டலத்தினைக் கடந்து பேரண்டத்தினுள் பிரவேசிக்கும் என்று விஞ்ஞானிகள் அறிகின்றனர்.

இதைப் போல வாயேஜர் 2 எனும் இன்னொரு ஆளில்லா விண்கலத்தை வாயேஜர்- 1க்கு எதிர்ப்புறமாக அதே 1977 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாசா ஏவியது. வினாடிக்கு பதினைந்து கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதற்கும் இம்மாதிரி விளைவினை இன்னும் சில வருடங்களில் சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் தேரைகள்

றைவனின் கோடிக்கணக்கான அத்தாட்சிகளில் கல்லுக்குள் வாழும் தேரை இனமும் ஓன்று. கல்லுக்குள் உணவு வைத்து அதை பல காலம் வாழும் படி படைத்துள்ளான் இறைவன். சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனை புகழ்ந்து பாடும் பாடல் உண்டு. ஆப்பிரிக்காவில் பாலைவனம் சேர்ந்த காடுகளில் பயணிக்கும் நாடோடிகள் பூமிக்கு அடியில் இருக்கும் தேரைகளை கண்டுபிடித்து அதன் வயிற்றில் இருக்கு தண்ணீரை அருந்தும் வழக்கம் உண்டு. ஒரு மனிதனின் தாகத்தை தணிக்கும் அளவிற்கு தண்ணீர் வயிற்றில் இருக்கும் தேரைகளும் உண்டு. தேரை இனத்தின் பெண் தேரைகள் முட்டையிட்டு சென்று விடும், ஆண் தேரைகள் தான் அந்த முட்டை பொறியும் வரை காத்திருந்து அடைகாக்கும். இது தவளை இனம் போல தாவி செல்லாது, மாறாக காலை இழுத்து தவழ்ந்து செல்லும். இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படும். மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.

இத்தனை தனித்துவம் கொண்ட தேரைகளுக்கு இறைவனை அளித்துள்ள இன்னொரு மகத்துவம் நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் ஆற்றல் உடையதாக இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் திறந்தவெளி பலகலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேரைகளின் இனவிருத்தியை இத்தாலியில் உள்ள ஒரு ஏரியில் ஆராய்ந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஏரிகளில் இருந்த தேரைகள் எல்லாம் திடிரென்று வேறு இடம் நகர்ந்து செல்ல தொடங்கி விட்டன. அவை அந்த ஏரியை விட்டு வேறு இடத்திருக்கு இடமாற்றம் செய்த ஐந்து நாட்கள் கழித்து அங்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஒரு வருடம் தேரைகளின் உடற்கூறுகளை நன்கு சோதித்து, பூகம்பம் வரும் முன் நிலத்தில் இருந்து வெளியேறும் வாயுவினை தேரைகள் அறியும் ஆற்றல் உடையதாக கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.

பூகம்பம் வருவதற்கு முன்பே விலங்கினங்கள் அதை அறியும் ஆற்றல் உண்டு என்று பரவலாக தெரிந்திருப்பினும் அதை முதன் முதலில் அதாரப்பூர்வமாக ஆவணம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

E=mc² இன் கதை




      நம்மில் பலரிடம் இந்த உலகிலேயே மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடு எதுவென்றுக் கேட்டால், எல்லோரும் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய பதில் "E = mc2 " என்பதாகத்தான் இருக்கும்!

அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜொலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணு குண்டால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் நாசமாவதற்கும் பாதை வகுத்தது.

இந்த அறிவியல் விந்தைக்குப் பின்னால் ஐன்ஸ்டைன் ஒருவரது உழைப்பு மாத்திரம் இல்லை. அதன் பின்னே பல மேதைகளின் வியர்வையும், ரத்தமும், காதலும் கலவையாகக் கலந்த ஒரு நூற்றாண்டு வரலாறு மறைந்துள்ளது. அதைத்தான் இப்போது நாம் கொஞ்சம் அலசப் போகிறோம்.

E = Energy

Michael Faraday, British scientist, 1791-1867

லண்டனின் சேரிப்பகுதியில், ஏழைக் கொல்லனின் மகனாகப் பிறந்த மைகேல் ஃபாரடே எனும் இளைஞனுக்கு அடிப்படைக் கல்வி அறிவு மிகக் குறைவு. புத்தகம் பைண்ட் செய்யும் ஒருக்  கடையில் வேலைப்பார்க்கும் போது, அங்கு வரும் புத்தகங்களைப் படித்தே, தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இப்படி  வளர்ந்து பின்னொரு காலத்தில் பெருமைமிக்க இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து புகழ் பெற்றார்.

1800 களின் துவக்கத்தில் ஆற்றல் (energy) என்பது பிரபஞ்சமளாவிய ஒரே ஆக்கப் பொருள் என்ற கருத்து இல்லாமலிருந்தது. நெருப்பிலிருந்து வரும் வெப்பமோ, சூரியனிலிருந்து வரும் கதிரோ, வெவ்வேறானவை என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் நம்ம ஃபரடே காட்சியில் வருகிறார். தன் அளப்பரிய உந்துதலாலும் கூர்ந்து நோக்கும் திறனாலும் சில விஷயங்களை ஆராய முற்பட்டார். மின்சாரம் பாயும் ஒரு கம்பியின் அருகே கொண்டு செல்லப்படும் ஒரு காந்தமுள் கண்ணா பின்னவென்று ஆடி ஏதோ ஒரு திசையில் நிற்பதைக் கண்டு வியந்தார்! இப்படி பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு மின் கம்பியைச் சுற்றி, மின்சார ஓட்டத்துக்கு நேர்கோணத்தில் காந்த வயல் (magnetic field) உருவாகிறது என்பதயும் கண்டுபிடித்தார். அதைப் போலவே ஒரு காந்தத்தைக் கொண்டு மின்சார ஓட்ட திசையையும் மாற்றிக் காட்டினார். இதுதான் உலகின் முதல் மின்சார மோட்டார்!மின் சக்தியும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றும் நிலைநாட்டினார். இப்படியாக மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது! இங்கிருந்துதான் ஐன்ஸ்டைன், ஆற்றல் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்று; ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறக்கூடியது என்பதைப் பயன்படுத்திக்கொண்டார்.

m = mass

Antoine-Laurent Lavoisier, French nobleman, tax collector, lawyer and amateur chemist, 1743-1794.

அன்டோனி லாரென்ட் லவோயிசியர் எனும் அமெச்சூர் வேதியல் விஞ்ஞானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வரி வசூலிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஒரு செல்வச் சீமான். இவரின் வேதியல் பங்களிப்பு அமெச்சூர் தனமானது என்று கூறப்பட்டாலும், இவரை நவீன வேதியலின் தந்தை என்றும் கூறுவர். இவரே ஆக்சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நாமகரணம் சூட்டியவர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் தண்ணீர் என்பதைக் கூறி, மனிதன் நிலவு வரை செல்ல சிவப்புக் கம்பளம் விரித்தவர். இவரது அயராத உழைப்பால் இவர் உலகுக்கும் குறிப்பாக  ஐன்ஸ்டைனுக்கும் உணர்த்திய உண்மை....  ஆற்றலைப்போலவே, வேறு எந்தவித மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது! அவரின் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, ஒரு(மரக்) கட்டை எரியூட்டப்பட்டால், அதிலுள்ள ப்லோகிஸ்டன் (phlogiston) எனும் பொருளின் மூலமாக, அப்பொருளின் நிறை, நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது. ஆகவேதான் உபரியாகக் கிடைக்கும் சாம்பலின் எடை, ஒரிஜினல் மரக்கட்டையின் எடையைவிட குறைந்துகாணப்படுகிறது என்று எல்லா அறிவியலாளரும் நம்பினர். அப்போதுதான் லவோயிசியர், தன் அயராத உழைப்பினாலும், அறிவார்ந்த தன் மனைவியின் உதவியோடு, எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும் ஒரு பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது... ஒரு வேதியல் சமன்பாட்டின் இரு பக்கங்களும் எப்போதும் சமமாக இருக்கும் என்பதையும் நிரூபித்தார். அவரின் இந்தக் கண்டுப்பிடிப்பே ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையில் முக்கியப் பங்காற்றியது. ஆனால் இதுவே இவரின் கடைசி கண்டுப்பிடிப்பாக ஆகிவிட்டது. பிரெஞ்சு மக்களுக்கு விடிவெள்ளியாக வந்த புரட்சி, இவருக்கு முற்றுப் புள்ளியாக மாறிப்போனது. இவர் பணக்கார வர்கத்தின் பிரதிநிதி என்பதால், பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நடந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கம் இவரைக் குறமற்றவர்  என்று பிரகடனப்படுத்தியது. அதன்பின், அவரின் சில உடைமைகளை அவரின் மனைவியிடம் அளிக்கப்பட்டபோது, அதன் மீது ஒரு துண்டுச்  சீட்டில் 'தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட லவோயிசியரின் விதவைக்கு....' என்று எழுதிருந்தது! பாவம். என்ன  ஒரு சோகம்?

"It took them only an instant to cut off his head, but France may not produce another like it in a century." - Joseph-Louis Lagrange, an Italian-born mathematician and astronomer.

c = Celeritas or Speed of light

James Clerk Maxwell, British mathematical physicist, 1831-1879. and Michael Faraday

எல்லாம் சரி. ஆற்றலும், நிறையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதனால் அவை சமன் பாட்டில் இடம் பிடித்துள்ளன. ஆனால் இந்த ஒளி எப்படி உள்ளே வந்தது? மிக மிக வேகமாகச் செல்லுவதற்கு லத்தீன் மொழியில் செலிரிட்டஸ் (celeritas) என்று அழைக்கப் படுகிறது. மனிதன் அறிவுக்கு எட்டியவரை மிக வேகமாக செல்லக் கூடியது ஒளி மட்டுமே. வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்! இங்கே மீண்டும் மைகேல் ஃபாரடே உள்ளே வருகிறார். ரொம்பக் காலமாகவே அவர் ஒளியும் மின்சாரத்தைப் போலவும் காந்தப்புலத்தைப் போலவும் மின்காந்தவியலைச் சார்ந்ததுதான் என்று உறுதியாக நம்பினார்.  ஆனால் அதைக் கணிதத்தனமாக நிரூபிக்க தேவையான எண்கணித அறிவு அவரிடம் போதியதாக இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு படிக்காத மேதைதானே! இந்த இடத்தில்தான் நன்கு படித்த கணிதத்தில் புலியான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எண்ணு இளைஞர் வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, மின்சாரத்திலிருந்து காந்தப் புலமும் காந்தப் புலத்திலிருந்து மின்சாரமும்... ஒரு குறிப்பிட்ட வேகத்திலிருக்கும் போது உண்டாகும். அந்த வேகம்தான் ஒளியின் வேகம்; அது எப்போதும் மாறாது என்று எண் கணிதம் மூலமாக உலகுக்கு நிரூபித்தனர். இதையும் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் சேர்த்துக்கொண்டார். ஒளியின் வேகம் மாறாது என்றால், வேறு ஏதோ ஒன்று மாறித்தான் ஆகவேண்டும். அது நிறை. ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அதன் நிறை அதிகரிக்கும் என்றும் அது அதன் ஆற்றலை சார்ந்திருக்கும் என்பதையும் குறித்துக் கொண்டார்.

2 - Squared

Emilie du Chatelet, French aristocrat, mathematician and physicist, 1706-1749.

இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப் படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்று தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).

இதற்க்கான விடை எமிலி டு ஷாட்டலே எனும் இளம் பிரெஞ்சு சீமாட்டியிடம் இருந்து வந்தது. இந்த எமிலி, தான் வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டுப் பெண்களில் மிகவும் வித்தியாசமான புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். அவருக்குப் புலமை இல்லாத கலையே இல்லை எனலாம். சர் ஐசக் நியூட்டனின் Principia Mathametica அறிவியலின் வேதத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அறிவியல் மற்றும் மொழி ஞானம் கொண்டவர். தன் 23 வது வயது முதலே கணிதத்தில் கரை கண்டு, ஐசக் நியூட்டன் முதலான மேதைகளுக்கே சவாலாகத் இருந்தார்.

ஒரு நகரும் பொருளுக்கு ஆற்றல் உண்டு. ஒரு பந்து, அதே போன்ற பந்தைவிட இரு மடங்கு வேகத்தில் சென்றால், அதன் ஆற்றலும் இரு மடங்கு இருக்கும் என்பது நியூட்டனின் கூற்று. ஆனால் நம்ம எமிலி மேடம் கூறுகிறார், அதன் ஆற்றல் நான்கு மடங்கு இருக்குமென்று! சொல்வதோடு நிற்கவில்லை. அதை ஒரு சிறு பரிசோதனை மூலம் நிரூபிக்கவும் செய்தார். சிறு ஈய குண்டுகளை குறிப்பட்ட உயரத்தில்லிருந்து, மிருதுவான களிமண் மீது போட்டு, அது எவ்வளவு தூரம் உள்ளே பதிகிறது என்று அளந்து கணக்கிட்டார். அப்போதுதான் அந்த களிமண்ணின் மீது போடப்பட்ட குண்டுகளின் ஆற்றல் அவைகளின் வேகத்தின் இரண்டு மடங்காக இல்லை, இரண்டு அடுக்காக (SQUARE) இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டு, ஆணானப்பட்ட (இதற்கு மாற்றுச் சொல் கிடைக்குமா?) நியூட்டன் சொன்ன ஒரு விதி மறைந்து போனது இந்தப் பெண்ணால்! இதைத்தான் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் உபயோகப்படுத்திக்கொண்டார்.

>மேடம் எமிலியைப்பற்றி இன்னும் சில கூடுதல் தகவல்கள். இவருக்கு ஏகப்பட்ட ஆண்களின் தொடர்பு இருந்ததாம்! அதுவும் அவரின் கணவருக்குத் தெரிந்தே!! அதில் ஒருவர் புகழ்ப்பெற்ற 'வைர நெஞ்ச வால்டேர்'ரும் ஒருவர். இருவரும் சேர்ந்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளனர்.(Elements of Newton's Philosophy). இவ்வளவு இருந்தும் பரிதாபகரமாக, தன் 43ஆம் வயதில், ஒரு இளம் கவிஞனால் கர்ப்பமாகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, ஆறு நாட்கள் கழித்து இறந்துபோனார்!
'c' என்ற ஒளியின் வேகம் ஒரு மாறா எண் என்பதை முதலில் புரிந்துக் கொண்டவர்களில் ஐன்ஸ்டைன் முதலாமவர். மிக நுட்பமாகக் கவனியுங்கள்.... நாம் என்னதான் வேகமாக சென்றாலும், நம்மிலிருந்து புறப்படும் ஒளி, மணிக்கு 670 மில்லியன் மைல் வேகத்தில் நம்மை விட்டுப் போய்விடும்! (ஆகவே ஒளியின் வேகத்தில் யாரும் பிரயாணிக்கவே முடியாது!) இங்கேதான் மேக்ஸ்வேல்லின் ஐடியாவை பிடித்துக்கொண்டார் ஐன்ஸ்டைன். 'c' என்பது மாறா எண் என்றால், ஒளியின் வேகத்தை அடையும் ஒருபொருளின் நிறை என்னவாகும்? அது கண்டிப்பாக அதிகரிக்கும்! இதிலிருந்து அவர் கூறுவது நிறையும், ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏன்...? அவை இரண்டும் ஒன்றே..! ஆற்றல்தான் நிறை, நிறைதான் ஆற்றல்! c² இன் மதிப்பு மிக மிக மிக அதிகமாக இருப்பதால், ஒரு சின்ன, கடுகளவு நிறை கொண்ட பொருளுக்கு அளவில்லாத ஆற்றல் இருப்பது நிச்சயம்! இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நாமெல்லாம் அந்த நட்சத்திரத் துகள்களால் உருவானவர்கள் என்பதையும் சூரியனிலிருந்து  நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிந்துவிடும்! நட்சதிரங்கள் தங்களின் அளவிட முடியாத நிறையை ஆற்றலாக மாற்றியபடியே உள்ளன என்பதும் விளங்கிவிடும்.
மேற்கூறிய அனைத்து விவரங்களும் David Bodanis எழுதிய E=mc2 : A Biography of the World's Most Famous Equation என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டவை.

வேற்று கிரகங்களில் மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களைச் சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்டார்டிகா, சைபீரியா, அலாஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரி கற்கள் வித்தியாசமானவை என்றும், இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்தது இல்லை என்றும், இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பது தான் பூமியில் உள்ளது, பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை, பூமிக்கு வெளியேவும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதையே இவை காட்டுகின்றன என்றும் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
"இவற்றுக்கு எல்லாம் மேலாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம், நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் பூமியில் வாழும் மனித இனத்துடன் தொடர்புடையவை என்பது தான். நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டேன். ஆனால், அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. "இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார். இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவில் இருந்து ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அழிவின் விளிம்பில் பிணந்தின்னிக் கழுகுகள்


"தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது.
இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு.

இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பிணந்தின்னிக்கழுகுகள் குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பறவை ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, "பம்பாய் இயற்கை வரலாற்று மையம்' பல்வேறு பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் "அருளகம்' அமைப்பு இணைந்து செயல்படுகிறது.


தமிழகத்தில் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலும், கேரளாவில் ஆறு இடங்களிலும், பிணந்தின்னிக்கழுகுகள் இருப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினோம்.  அக்., - நவ., மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு.


கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது. கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும். 


இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது.  நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது.

நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

தற்போதும், "டைக்குளோபினாக்' வலிநிவாரணி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்

பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

Pavalapaaraiபவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்திசெய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,

மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச் செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப் போனது அவமானகரமான செய்தி அல்லவா?

புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத்தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tuesday 15 March 2011

இதய அறுவை சிகிச்சை!!!


இதயத்திலுள்ள சிறு சிறு ரத்த நாளங்களில் பழுது ஏற்பட்டால் ஆஞ்சியோ ப்ளாஸ்டி சர்ஜரியும், முக்கியமான ரத்தக் குழாயில் பழுது என்றால் பை பாஸ் சர்ஜரியும் செய்யப்படுகிறது. பை பாஸ் என்பது ரத்தக் குழாயின் அந்த பகுதிக்குப் பதிலாக மற்றொரு புது ரத்தப் பாதையை உருவாக்குவதாகும். நோயாளியின் உடலிலிருந்து (கால் பகுதி) ரத்தக் குழாயை அங்கு வைத்து மாற்றுப் பாதையை அடைப்பதுதான் பை_பாஸ் சர்ஜரி. பை பாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் அப்பிரச்னை வருவது அரிது.

ஆனால், ஆஞ்ஜியோ ப்ளாஸ்டியில் சுமார் இருபது சதவிகிதம் பேருக்குச் சரிசெய்யப்பட்ட இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் கொழுப்பு சத்தோடு ஸ்கார் திசுக்களும் சேர்ந்துதான் அந்த அடைப்புக்குக் காரணமாக இருந்திருக்கும். கொழுப்புச் சத்தை நீக்கினாலும் ஸ்கார் திசுக்கள் அங்கேயே இருக்க வாய்ப்புண்டு. மறுபடியும் அங்கு கொழுப்புச்சத்து சேரும் போது மீண்டும் அடைப்பு ஏற்படலாம். இதற்காக ஒரு ஸ்பெஷல் இரும்பினால் ஆன வலை ஒன்றை இந்த அடைப்பு இடத்தில் பொருத்தி விட்டால், ரத்தக்குழாய் சுருங்க வாய்ப்பு இல்லை. நாளடைவில் இந்த வலை உடலோடு ஒன்றிவிடும்.

Monday 14 March 2011

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

credit: Rolf hicker
இந்த அலைகள் இருக்குங்களே, அதுங்கள சாதாரணமானதுன்னு நெனச்சிடாதீங்க. மேலோட்டமா பார்க்குறதுக்கு வேணும்னா அலைகள் உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். ஆனா, இந்த உலகத்துல முதல் முதல்ல டெலஸ்கோப் வச்சி நட்சத்திரங்களையே ஆய்வு செஞ்ச விண்வெளி விஞ்ஞானியான, ஆணானப்பட்ட கலிலியோவுக்கு தண்ணிக்காட்டி இருக்குங்க இந்த அலைகள்னா பார்த்துக்குங்களேன்?!
அதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை நிறுவினாராம் கலிலியோ. ஆனா, கடைசியில அது அர்த்தமே புரியாத, விளங்காத ஒரு கோட்பாடா ஆகிப்போச்சாம்?! அடப்பாவமே….! இப்படி கலிலியோவுக்கே கல்தா கொடுத்த இந்த அலையைப் பத்தி இன்னிக்கு ஓரளவுக்கு தெரியும் சில/பல பேருக்கு. அதாவது…..
பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்புசக்தியினாலேயே அலைகள் தோன்றுகிறது அப்படீங்கிற உண்மைதான் அது. அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தானாம்!”
பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, பூமியின் சமுத்திரங்களை பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாம்! அதுமட்டுமில்லாமல், உலகில் வேறு எந்த ஈர்ப்பு விசையும் இல்லாதுபோகும் பட்சத்தில், பூமி தன்னைத்தானே சுற்றிவருகையில் ஏற்படும் ஒரு ராட்சத அலையினால், உலகக் கடலின் கரைகளெல்லாம் கடலுக்குள் (நிலவின் ஈர்ப்பு விசையினால் உருவாகும் அந்த ராட்சத அலைக்குள்) மூழ்கிவிடக்கூடிய அபாயம் ஏற்படுமாம்! (அநியாயத்துக்கு இயற்பியலா இருக்குங்க! ஒன்னும் விளங்கல?!)
ஆனா, ஒன்னும் கவலைப்படாதீங்க! ஏன்னா, நகர்ந்துகொண்டே/இடம்மாறிக்கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் இனர்ஷியா என்னும் உலகின் இயல்பு/தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதால், ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது விஞ்ஞானம்!
இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தையும் நிலவின் ஈர்ப்புவிசையின் திசையில் தொடர்ந்து நகரச்செய்யுமாம் பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே! அதனால், உலகிந் சமுத்திரங்கள் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கிவரும்போது அந்தப் பக்கத்தில் சமுத்திரமானது இருக்கும்போதும், அடுத்தது நிலவை பூமி சுற்றிவரும்போது பூமியானது நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது அந்தப்பக்கத்தில் சமுத்திரம் இருக்கும்போது என இருமுறை சமுத்திரங்கள் எழும்புகின்றனவாம்! அப்படீன்னு நான் சொல்லல, அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் நகர சமுத்திர ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் சொல்றாங்க. ஓஹோ அப்படியா?!
உலகின் புவியியல் அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில் இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்! அதென்ன கொசுறா ஒரு 50 நிமிஷம்னு கேக்குறவங்களுக்கு, பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமாம் அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth). கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு சாமீய்….!!)
சூரியனும் அலைகளும்!
அலைகள் (ஏன்) ஓய்வதில்லைங்கிறதுக்கு நிலவு மட்டுந்தான் காரணம்னு பார்த்தா, “ஏய் நாங்களும் இருக்கோமுல்ல காரணமா” அப்படீன்னு சொல்லிக்கிட்ட வர்றாரு சூரியனார். அட ஆமாங்க, சூரிய அலைகள்னு ஒன்னு இருக்குதாமுல்ல. அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பேராம். ஆனால், நிலவினால் ஏற்படுற அலைகளைவிட சூரிய அலைகள் சக்தி குறைந்தவையாம். ஓஹோ….?!
நிலவைவிட 27 மடங்கு பெரியது சூரியன். அதேசமயம் பூமிக்கு நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறதாம் சூரியன். அதனால, நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி/விசையில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறதாம் தேசிய சமுத்திர மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூற்றுப்படி!
உலக அலைகள்; சில சுவாரசியங்கள்!
  1. கனடா நாட்டின் ஃபன்டி என்னு விரிகுடாவில் உலகின் மிகப்பெரிய அலைகள் தோன்றுகின்றனவாம். சுமார் ஒரு 4 மாடிக்கட்டிடம் அல்லது 49 அடி (15 மீட்டர்) உயரம்வரை எழும்புமாம் இந்த அலைகள்!
  2. இங்கு உருவாகும் ஒவ்வொரு அலையும் சுமார்  110 பில்லியன் டன் நீரை தள்ளுகின்றனவாம். அடேங்கப்பா….!
அலைகளைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்; அன்றும் இன்றும்!
கடந்த 1595 ஆம் வருடம், விண்வெளி விஞ்ஞானி திரு.கலீலியோ கலீலி அவர்கள், அலைகள் தோன்றுவதற்க்கான காரணங்களை விளக்க முயன்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியபோது, நிலவை கோட்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டாராம் அவர். மாறாக, பூமி சூரியனைச் சுற்றி வருவதையும், உலக சமுத்திரங்களின் இனெர்ஷியாவை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டாராம் கலீலியோ!
ஆனால், கடந்த 1687 ஆம் வருடம், இயற்பியல் விஞ்ஞானி திரு.சர் ஐசாக் நியூட்டன் அவர்கள்தான் அலைகள் தோன்றுவதற்க்கான காரணம் ஈர்ப்பு விசை என்று சரியாக கணித்தாராம். வாழ்க நியூட்டன் ஐயா அவர்களின் புகழ்!!

சுனாமி எவ்வாறு ஏற்படுகிறது?

சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இது இரண்டு எழுத்து வார்த்தையாகும். முதல் எழுத்தான சு- துறைமுகத்தையும் னாமி - என்பது அலையையும் குறிக்கிறது. கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற கடுமையான தாக்குதலால் கடல் பாதிக்கப்படும் சமயங்களில் மிக ஆக்ரோஷமான கடல் அலைகள் உருவாகின்றன. இது மட்டுமின்றி கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்றவை பெருமளவில் நிகழும் சமயங்களில் கடல் நீர் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் காரணமாக கடலின் தரைப்பகுதிகளில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக உருவாகும் அலைகள் கரையை நோக்கி கடலுக்கு அடியிலேயே மிக வேகமாக பயணித்து கரையை அடைந்ததும் மோதிச் சிதறுகின்றன. இவ்வாறு சிதறும் போது கரைப்பகுதியில் இருப்பவை அனைத்தையும் அழைத்துச் செல்லுகின்றன. இந்தத் தக்குதலே சுனாமி என்று அழைக்கப்படுகிறது.
சுனாமி அலைகள் பெரும்பாலும் கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்களின் விளைவாகவே உருவாகின்றன. இதுமட்டுமின்றி கடலுக்கு அடியில் இருக்கும் பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துச் சிதறி கடலை சீற்றமடையச் செய்யும் போதும் சுனாமி அலைகள் உருவாகின்றன. பூகம்பங்கள் 8.0 ரிக்டர் அளவிற்கு மேல் பதிவாகும் போதுமட்டுமே சுனாமி பேரல்கைகள் உருவாகின்றன. சுனாமி பேரலைகளால் நீர் பாதிப்புக்கு ஆளானவுடன் கடற்கரைப் பகுதிகளில் நீரானது சுமார் 100 அடி முதல் 200 அடிகள் வரை உள்ளே இழுக்கப்பட்டு உள்நோக்கிச் செல்லும். பின்னர் இராட்சத அலைகள் உருவாகி கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து சுமார் 10 முதல் 50 அடி உயரம் வரை எழும்பி கரையைத் தாக்கும். இந்தியப் பெருங்கடலில் சுனாமி மிக அரிதாகவே உருவாகும்.
சமீபத்தில் நடந்த சுனாமி, பூமியில் க்ரெஸ்ட் எனப்படும் பகுதியில் நகரக்கூடிய டெக்டானிக் பிளேட் எனப்படும் பாறைப் பலகைகள் உள்ளன. இதில் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் இந்திய பெருங்கடலில் இந்தோனேஷியாவின் தீவான சுமத்ரா தீவின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 155 மைல் தொலைவில் தங்கள் வழக்கமான இடத்திலிருந்து நழுவின. இதன் விளைவாக கடலின் தரைப்பகுதியில் பெரும் பாதிப்புகள் நிகழ்ந்து கடல் பெரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு சுனாமி ஏற்பட்டது. இப்பகுதியில் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆக பதிவானது. கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் மிகவும் அதிகப்படியான நிலநடுக்கம் இதுவே ஆகும்.
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலைகள் எல்லா திசைகளிலும் பரவ ஆரம்பிக்கின்றன. கடல் பேரலைகள் வட்டமாக எல்லா திசைகளிலும் பயணம் செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும். இவாறு அசுரத்தனமான சக்தி படைத்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒருமைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் அசுர சக்தி படைத்தவை.

Sunday 13 March 2011

சந்திரன் சுருங்குகிறது

Moon is shrinking - scientistsசந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.
இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சந்திரன் பூமியை விட குறுக்களவில் நான்கில் ஒரு பகுதி அளவுடையது. தற்போது அது சுருங்கி வருவதால் முற்றிலும் அழியும் நிலை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4600 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் அமைப்பு


Earth shape in 4600 billion years ago4600 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் அதாவது பூமி தற்போதைய நிலையைவிட மிக வேறுபட்டே காணப்பட்டது. புவியைச்சுற்றி வாயுக்களால் சூழப்பட்டே காணப்பட்டது.
அன்று அதன் வெப்பநிலை 4000 டிகிரி செல்லியஸ் முதல் 8000 டிகிரி செல்லியஸ் வரை காணப்பட்டது. பின் அண்டவெளியில் ஏற்ப்பட்ட சில தாக்கங்களால் பூமியை சுற்றியுள்ள வாயுக்கள் குளிர்வடைந்தது.

பூமியின் மத்தியில் செஞ்சூடான திரவ குழம்பு நிலை காணப்பட்ட போதிலும் அதன் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்து திடமாகி பாறைகளால் ஆன பூமி உருவானது. பின்னர் படிப்படியாக சிதைவடைந்து மண் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

2036-ல் அப்போஃபிஸ் கோள் பூமியைத் தாக்கலாம்


Apophis asteroid could hit the earth in 2036அப்போஃபிஸ் என்ற சிறிய கோளானது பூமியைத் தாக்க இருப்பதாக ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பூமியுடன் மோதலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை கண்டறிந்துள்ளனர்.

அப்போஃபிஸ் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி சுமார் 37,000 முதல் 38,000 கிலோ மீட்டர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும், 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவித்தார். சிலவேளை மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 -ல் 1 பங்கு என்ற வாய்ப்பே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதை தவிர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்வதிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்

கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மம்மியின் செயற்கை உறுப்புகள்!


கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மம்மியின் செயற்கை உறுப்புகள்! இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.அதில் மனித உடலின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி பின்ச் கூறுகையில், “3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா? அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா-? என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எட்டாவது அதிசயம்

வெலிங்டன்: 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் எட்டாவது அதிசயமாக கருதப்பட்ட நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா மையமொன்று மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக பூமியில் புதைந்தது. அந்த எட்டாவது அதிசயம் 125 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து ஏரிக்கு கீழே அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சியின் போது நியூசிலாந்து நாட்டின் ரொடொமொஹானா ஏரியில் 60 மீட்டருக்கு கீழே வெள்ளை நிற மேற்கூரைகளும், இளஞ்சிவப்பு நிற அமைப்புகளும் தென்பட்டதாக கூறியுள்ளனர்.

அக்காலத்தில் அந்த கட்டிடங்கள் விசிறிமடிப்பு போன்ற மாடி படிக்கட்டுகளோடு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மேற்கூரைகளோடு ஒரு பெரிய திருமண கேக்கு போல் வடிவமைக்கப் பட்டிருந்தனவாம். 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி அருகாமையில் இருந்த மவுண்ட் டரவேரா எரிமலை வெடித்துச் சிதறியதில் புதையுண்டதாம் அந்த புகழ்பெற்ற நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா ஸ்தலம்.  1,111, மீட்டர் உயரத்துடன் விளங்கிய மலையானது ஐந்து மணி நேர கொந்தளிப்பில் இரண்டாகப் பிளந்து, அதன் விளைவாக எழுந்த சிதறல்கள் ஆயிரக்கணக்கான சதுர மைல்களை சென்றடைந்தனவாம். அந்த சம்பவத்தில் மூன்று கிராமங்கள் புதையுண்டன, 153 பேர் மாண்டனர். அப்போது 10 கிமீ உயரத்திற்கு புகைமண்டலம் பரவியதாம்.

மாவுரி மொழியில் வெப்ப ஏரி என அழைக்கபட்ட ரொடொமஹானா ஏரியே அந்த எரிமலை வெடிப்பில் வறண்டு ஒன்றுமில்லாமல்  போனது.  ஆனால் ஏரியின் கரையிலிருந்து கொப்பளித்து பாய்ந்த வெப்ப நீர் ஊற்றுகளால் அந்த ஏரி மேலும் பன்மடங்கு பெரிதானது. 

அமெரிக்காவின் மாஸச்சூட் பகுதியின் 'கேப் காட்' டிலுள்ள வுட்ஸ் ஹோல் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் 8 சதுர கிமி பரப்பளவுள்ள நியூசிலாந்து ஏரியின் கீழ் இத்தகைய அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.அவர்களது ஆராய்ச்சியில் ஏரியின் நிலப்பரப்பில் ஒன்றிரண்டு மீட்டர் உயரத்திற்கு 70 மீட்டர் நீளத்திற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் புதையுண்ட கட்டிடங்களின் பிம்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஜி.என்.எஸ் சயின்ஸ் அமைப்பின் திட்டக்குழு தலைவர் கர்னல் டி ரோண்டெ கூறியதாவது,  " இத்தகைய இளஞ்சிவப்பு நிற கண்டுபிடிப்பின் மூலம் ஒரு நூறாண்டு கால கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. நாங்கள் அந்த அமைப்பை கண்டவுடன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சோதனை செய்தோம். அது நியுசிலாந்து ஏரியில் புதையுண்ட அந்த பிங்க் மாளிகையே என்னும் விஷயத்தில் 95 சதம் உறுதியாக உள்ளோம். பெரிய வெள்ளை நிற மாளிகை முகடு எதுவும் தென்படவில்லை. அது எரிமலை கொந்தளிப்பில் அழிந்து போயிருக்கலாம். அவ்வாறு ஒரு மாளிகை உண்மையிலேயே இருந்ததா என்பதே 125 ஆண்டுகளாக மர்மமாக் இருந்த சூழ்நிலையில் இது ஒரு மிகப்பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பாகும்." என்று தெரிவித்துள்ளர்.

நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள சரித்திர ஆராய்ச்சியாளர் மார்கரெட் மக்யூர் "இத்தகைய மேற்கூரைகளும் அவற்றிலிருந்து இறங்கிய வெந்நீர் அருவிகளும்தான் அங்கு அதிசயிக்க விஷயம்.  அந்த ஏரியைக்காண இப்போதும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர்." என்று கூறியுள்ளார். அந்நாட்களில் அல்லாவுதின் குகையென்றும், மாயாலோகமென்றும் மக்கள் கருதினர் என்று தெரியவருகிறது.

ஏரிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த இடங்கள் மின்சார உற்பத்தி நிலையமாக மாற்றப்படலாம் என்று சிலர் கூறினாலும் அந்த பிரதேச மக்களான மாவுரிகளோ அந்த இடம் அவர்களது மூதாதையர்கள் மறைந்த இடம், அவர்களது நினைவிடமாக போற்றப்படவேண்டிய புனிதமான் இடம் என்று கூறுகின்றனர்.

பூமியை நெருங்கும் “சூப்பர் மூன்” எதிர்வரும் 19ம் திகதி பூமிக்கு ஆபத்து??

பூமியை நெருங்கும் “சூப்பர் மூன்” எதிர்வரும் 19ம் திகதி பூமிக்கு ஆபத்து??
பூமியின் துணைக்கோளான நிலவு பூமியிலிருந்து சராசரியாக 2.38.857 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது எதிர்வரும் 19ம் திகதி ஏறத்தாழ 2.21.567 மைல்கள் வரை பூமியை நெருங்கி வரவுள்ளது. 19 வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் நிகழும் இந்த அரிய நிகழ்வு சூப்பர்மூன் என அழைக்கப்படுகிறது. இதனால் பூமியில் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படும். மேலும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.
2005 ஜனவரி சூப்பர்மூன் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. எனவே மார்ச் 19 அன்று பூமியை நெருங்கி வரும் நிலவால் ஆபத்து ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்

நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ?





அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார்.







ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.






விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.






ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.





இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

பெர்முடா முக்கோணம்

வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும், பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின் இயல்பு வியப்பானத்தும் அச்ச மூட்டக் கூடியதும் ஆகும்.




இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன் காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முடா முக்கோணத்தின் பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.




உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில் வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால்
இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும்
எழுதியிருக்கிறார்.



படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும் விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய் மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.

பெர்முடா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன் மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (மேக்னடிச் வெரியடியொன்) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.



அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (சோங்கேலெட் எனெர்க்ய்) மறுவடிவம் என்றும்
இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில் உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில் திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத் தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற பரமாணுக் களாக மாறிக் காற்றில்கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

பெர்முடா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக இருக்கலாம என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது பரிமாணம் என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.




இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.
விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.