Wednesday 16 March 2011

அழிவின் விளிம்பில் பிணந்தின்னிக் கழுகுகள்


"தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் உபயோகத்தில் இருப்பதால், பிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது.
இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  இந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு.

இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைப் பேராசிரியர் கிறிஸ்டோபர், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பிணந்தின்னிக்கழுகுகள் குறித்து ஆராய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பறவை ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, "பம்பாய் இயற்கை வரலாற்று மையம்' பல்வேறு பகுதிகளிலும் ஆய்வில் ஈடுபட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் "அருளகம்' அமைப்பு இணைந்து செயல்படுகிறது.


தமிழகத்தில் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலும், கேரளாவில் ஆறு இடங்களிலும், பிணந்தின்னிக்கழுகுகள் இருப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினோம்.  அக்., - நவ., மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு.


கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது. கடந்த 1993ல் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்து, "டைக்குளாபினாக்' இந்தியாவில் அறிமுகமானது. அந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள், இறந்த பின் தூக்கி எறியப்பட்டால் அவற்றை உண்ணும் கழுகுகள், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி ஒரே நாளில் இறந்து விடும். 


இக்காரணத்தைக் கண்டறியும் முன், 99.9 சதவீத கழுகுகள் இறந்து விட்டன. நாங்கள் நடத்திய ஆய்வில், கேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது.  நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது.

நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

தற்போதும், "டைக்குளோபினாக்' வலிநிவாரணி கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு, கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

No comments: