Monday 14 March 2011

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

credit: Rolf hicker
இந்த அலைகள் இருக்குங்களே, அதுங்கள சாதாரணமானதுன்னு நெனச்சிடாதீங்க. மேலோட்டமா பார்க்குறதுக்கு வேணும்னா அலைகள் உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். ஆனா, இந்த உலகத்துல முதல் முதல்ல டெலஸ்கோப் வச்சி நட்சத்திரங்களையே ஆய்வு செஞ்ச விண்வெளி விஞ்ஞானியான, ஆணானப்பட்ட கலிலியோவுக்கு தண்ணிக்காட்டி இருக்குங்க இந்த அலைகள்னா பார்த்துக்குங்களேன்?!
அதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை நிறுவினாராம் கலிலியோ. ஆனா, கடைசியில அது அர்த்தமே புரியாத, விளங்காத ஒரு கோட்பாடா ஆகிப்போச்சாம்?! அடப்பாவமே….! இப்படி கலிலியோவுக்கே கல்தா கொடுத்த இந்த அலையைப் பத்தி இன்னிக்கு ஓரளவுக்கு தெரியும் சில/பல பேருக்கு. அதாவது…..
பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்புசக்தியினாலேயே அலைகள் தோன்றுகிறது அப்படீங்கிற உண்மைதான் அது. அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தானாம்!”
பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, பூமியின் சமுத்திரங்களை பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாம்! அதுமட்டுமில்லாமல், உலகில் வேறு எந்த ஈர்ப்பு விசையும் இல்லாதுபோகும் பட்சத்தில், பூமி தன்னைத்தானே சுற்றிவருகையில் ஏற்படும் ஒரு ராட்சத அலையினால், உலகக் கடலின் கரைகளெல்லாம் கடலுக்குள் (நிலவின் ஈர்ப்பு விசையினால் உருவாகும் அந்த ராட்சத அலைக்குள்) மூழ்கிவிடக்கூடிய அபாயம் ஏற்படுமாம்! (அநியாயத்துக்கு இயற்பியலா இருக்குங்க! ஒன்னும் விளங்கல?!)
ஆனா, ஒன்னும் கவலைப்படாதீங்க! ஏன்னா, நகர்ந்துகொண்டே/இடம்மாறிக்கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் இனர்ஷியா என்னும் உலகின் இயல்பு/தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதால், ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது விஞ்ஞானம்!
இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தையும் நிலவின் ஈர்ப்புவிசையின் திசையில் தொடர்ந்து நகரச்செய்யுமாம் பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே! அதனால், உலகிந் சமுத்திரங்கள் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கிவரும்போது அந்தப் பக்கத்தில் சமுத்திரமானது இருக்கும்போதும், அடுத்தது நிலவை பூமி சுற்றிவரும்போது பூமியானது நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது அந்தப்பக்கத்தில் சமுத்திரம் இருக்கும்போது என இருமுறை சமுத்திரங்கள் எழும்புகின்றனவாம்! அப்படீன்னு நான் சொல்லல, அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் நகர சமுத்திர ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் சொல்றாங்க. ஓஹோ அப்படியா?!
உலகின் புவியியல் அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில் இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்! அதென்ன கொசுறா ஒரு 50 நிமிஷம்னு கேக்குறவங்களுக்கு, பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமாம் அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth). கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு சாமீய்….!!)
சூரியனும் அலைகளும்!
அலைகள் (ஏன்) ஓய்வதில்லைங்கிறதுக்கு நிலவு மட்டுந்தான் காரணம்னு பார்த்தா, “ஏய் நாங்களும் இருக்கோமுல்ல காரணமா” அப்படீன்னு சொல்லிக்கிட்ட வர்றாரு சூரியனார். அட ஆமாங்க, சூரிய அலைகள்னு ஒன்னு இருக்குதாமுல்ல. அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பேராம். ஆனால், நிலவினால் ஏற்படுற அலைகளைவிட சூரிய அலைகள் சக்தி குறைந்தவையாம். ஓஹோ….?!
நிலவைவிட 27 மடங்கு பெரியது சூரியன். அதேசமயம் பூமிக்கு நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறதாம் சூரியன். அதனால, நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி/விசையில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறதாம் தேசிய சமுத்திர மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூற்றுப்படி!
உலக அலைகள்; சில சுவாரசியங்கள்!
  1. கனடா நாட்டின் ஃபன்டி என்னு விரிகுடாவில் உலகின் மிகப்பெரிய அலைகள் தோன்றுகின்றனவாம். சுமார் ஒரு 4 மாடிக்கட்டிடம் அல்லது 49 அடி (15 மீட்டர்) உயரம்வரை எழும்புமாம் இந்த அலைகள்!
  2. இங்கு உருவாகும் ஒவ்வொரு அலையும் சுமார்  110 பில்லியன் டன் நீரை தள்ளுகின்றனவாம். அடேங்கப்பா….!
அலைகளைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்; அன்றும் இன்றும்!
கடந்த 1595 ஆம் வருடம், விண்வெளி விஞ்ஞானி திரு.கலீலியோ கலீலி அவர்கள், அலைகள் தோன்றுவதற்க்கான காரணங்களை விளக்க முயன்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியபோது, நிலவை கோட்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டாராம் அவர். மாறாக, பூமி சூரியனைச் சுற்றி வருவதையும், உலக சமுத்திரங்களின் இனெர்ஷியாவை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டாராம் கலீலியோ!
ஆனால், கடந்த 1687 ஆம் வருடம், இயற்பியல் விஞ்ஞானி திரு.சர் ஐசாக் நியூட்டன் அவர்கள்தான் அலைகள் தோன்றுவதற்க்கான காரணம் ஈர்ப்பு விசை என்று சரியாக கணித்தாராம். வாழ்க நியூட்டன் ஐயா அவர்களின் புகழ்!!

No comments: